இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் பானமாக தேநீர் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் காபிக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாற்றத்தை சரியாக புரிந்துகொண்ட டெல்லியைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள், குறைந்த முதலீட்டில் தொடங்கிய காபி வியாபாரத்தை இன்று பல கிளைகளைக் கொண்ட நிறுவனமாக வளர்த்துள்ளனர்.
வைபவ் அரோரா மற்றும் வன்ஷ் மோர் ஆகியோர் இணைந்து தொடங்கிய Kofi Kafi நிறுவனம், தற்போது டெல்லியில் ஐந்து கிளைகளுடன் செயல்பட்டு ஆண்டுக்கு சுமார் ரூ.2.4 கோடி வருமானம் ஈட்டி வருகிறது.
ரூ.3 லட்சத்தில் தொடங்கிய முயற்சி
2023 ஜூன் 11-ஆம் தேதி, டெல்லியின் ரோகிணி பகுதியில் சாலையோர காபி கார்ட்டை அமைத்து Kofi Kafi தொடங்கப்பட்டது. இதற்கு ஆரம்ப முதலீடாக வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பாரம்பரிய காபி இயந்திரங்களையும் உயர்தர இன்ஸ்டன்ட் காபியையும் பயன்படுத்தி விற்பனையைத் தொடங்கினர். ஒரு கப் காபியை ரூ.50 முதல் ரூ.85 வரை விற்பனை செய்தனர்.
இதையும் படிங்க : டீ குடிக்கும் போது தெரியாமல் கூட இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க..!
வணிக யோசனை எப்படி உருவானது?
இருவரும் அடிக்கடி பிரபல காபி கடைகளுக்குச் சென்று காபி அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் ஒரு கப் காபிக்கே ரூ.300 முதல் ரூ.400 வரை செலவழிப்பது நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
இதையடுத்து, மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு தரமான காபியை குறைந்த விலையில் வழங்கலாம் என்ற யோசனை உருவானது. அதன் பிறகு Kofi Kafi-க்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் மூலம் ஆரம்ப முதலீட்டை மிகக் குறுகிய காலத்திலேயே மீட்டெடுக்க முடிந்தது. இந்த வெற்றியே அடுத்த கட்ட விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது.
சாலையோர கடையில் இருந்து நிரந்தர கடை
2023 நவம்பரில் டெல்லியின் கமலா நகர் பகுதியில் நிரந்தர கடையை திறந்தனர். இதற்காக சுமார் ரூ.2 லட்சம் முதலீடு செய்து இயந்திரங்கள் வாங்கப்பட்டன. அதன் மூலம் புதிதாக காபி தயாரிக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டது.
தினமும் 1,500 வாடிக்கையாளர்கள்
டெல்லியின் ரோகிணி, விஸ்வவித்யாலயா மெட்ரோ, வசந்த் விஹார், ராம் லால் ஆனந்த் கல்லூரி வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 5 கிளைகள் செயல்பட்டு வருகின்றன.
அனைத்து கிளைகளையும் சேர்த்து தினசரி 1,000 முதல் 1,500 பேர் வரை வருகை தருகின்றனர். தற்போது மாதந்தோறும் சுமார் ரூ.20 லட்சம் வருமானம் கிடைப்பதாகவும், ஆண்டுக்கு அது ரூ.2.4 கோடி அளவை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : சங்கு பூ டீயில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? எப்படி செய்வது?
