ஜப்பானில் மட்டும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்? – என்ன காரணம்?

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குமமோட்டோ மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

ரிக்டர் அளவில் 6-க்கும் அதிகமான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 10 சதவீதம் ஜப்பான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நிகழ்கின்றன. அதற்கான புவியியல் காரணங்கள் குறித்த தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது ஏன்?

புவியியல் அமைப்பின்படி, பூமியின் மேலோட்டில் உள்ள 4 முக்கிய ‘டெக்டோனிக் தட்டுகள்’ சந்திக்கும் எல்லையில் ஜப்பான் அமைந்துள்ளது. இந்த பாறைத் தட்டுகள் தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டும், நகர்ந்துகொண்டும் இருக்கின்றன.

பசுபிக் பெருங்கடலைச் சுற்றி சுமார் 25,000 மைல் தொலைவிற்குப் பரவியுள்ள, உலகின் மிக அதிக நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் நிகழும் ‘நெருப்பு வளையம்’ பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. உலகின் 90% நிலநடுக்கங்கள் மற்றும் 75% தீவிர எரிமலை வெடிப்புகள் இந்த மண்டலத்தில்தான் நிகழ்கின்றன. இதன் காரணமாக இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கட்டிட விதிகளில் மாற்றம்

1923-இல் நடைபெற்ற ‘கிரேட் காண்டோ’ நிலநடுக்கத்தில் 1.4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர், 1980-களில் ஜப்பான் அரசு தனது கட்டிட விதிகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.

அதிர்வுகளை உறிஞ்சும் சிறப்புச் சுவர்கள், நெகிழும் தன்மையுடைய கட்டிட அமைப்புகள் கட்டாயமாக்கப்பட்டன. அதிநவீன நிலநடுக்கக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் முன்னெச்சரிக்கை அமைப்புகளுக்காகப் பல பில்லியன் டாலர்களை ஜப்பான் அரசு முதலீடு செய்துள்ளது. குழந்தைகள் பள்ளிப் பருவத்திலிருந்தே நிலநடுக்க அவசரகாலப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், நிலநடுக்கங்களை மனிதனால் தடுக்க முடியாது என்பதால், விழிப்புணர்வையும் அவசரகாலத் தயார்நிலையையும் மேம்படுத்துவதன் மூலமே பெரிய அளவில் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்க முடியும் என்பதற்கு ஜப்பான் உலகிற்கே சான்றாக விளங்கி வருகிறது.

Related Post

Latest News