பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக சென்ற தம்பதியை செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் திடீரென தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றும் அங்கித் சபர்வால், அவரது மனைவி ஷிஃபாலி சபர்வால் ஆகியோர் வீட்டு புரோக்கர் ஒருவருடன் வாடகை வீடு பார்ப்பதற்காக சென்றுள்ளனர். வீட்டின் வாசல் திறக்கப்பட்டபோது உள்ளே இருந்த பிட்புல் நாய் திடீரென வெளியே பாய்ந்து ஷிஃபாலியை கடுமையாக தாக்கியது.
தனது மனைவியை தாக்கியதை பார்த்த அங்கித், அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய் தாக்கியுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து நாயை அடித்து வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஷிஃபாலியின் கைகள் மற்றும் கால்களில் ஏற்பட்ட காயங்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாயை கட்டுப்பாட்டில் வைக்க தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கித் கோரிக்கை விடுத்துள்ளார்.
