போலி சான்றிதழ் கொடுத்து வக்கீல் தொழில்: 39 பேர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களைப் பயன்படுத்தி வக்கீலாகப் பதிவு செய்து பணியாற்றி வந்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக 39 போலி வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் பரபரப்பு உத்தரவு

உத்தரப் பிரதேச பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணியின் போது, பலரின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 3-ஆம் தேதி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது.

105 பேர் மீது பார் கவுன்சில் அளித்த புகார்

உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச பார் கவுன்சில் தீவிர விசாரணையில் ஈடுபட்டது. அதில், சட்டவிரோதமாக போலி சான்றிதழ் மூலம் வழக்கறிஞர் தொழில் செய்து வந்த 105 பேரை முதற்கட்டமாக அடையாளம் கண்டது.

இதையடுத்து, பிரயாக்ராஜில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் இந்த 105 நபர்கள் மீதும் பார் கவுன்சில் நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி இவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்து, முறைகேடாக வக்கீல் தொழில் செய்து வருவதாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

39 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு

பார் கவுன்சில் அளித்த புகாரின் அடிப்படையில் சிவில் லைன்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யத் தொடங்கினர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 39 போலி வழக்கறிஞர்கள் மீது தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மீதமுள்ள நபர்கள் மீது இன்னும் ஓரிரு நாட்களில் வழக்குப்பதிவு செய்யப்படும். அதன் பின்னர், போலி சான்றிதழ் தயாரித்த பின்னணி குறித்தும் தீவிர விசாரணை தொடங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க : இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு : 157 பேர் பலி ; 257 பேர் மாயம்

Related Post

Latest News