மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்தங்கா பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால் ஷேக், கடந்த 5 ஆண்டுகளாகத் தனது பெரும்பாலான நேரத்தை குளத்து நீரிலேயே கழித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீரிலிருந்து வெளியே வந்து காற்று பட்ட உடனேயே உடல் முழுதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதாகவும், மீண்டும் தண்ணீருக்குள் சென்றால் மட்டுமே அந்த எரிச்சல் தணிவதாகவும் இக்பால் தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் தொடர்ச்சியாகத் தண்ணீரில் இருப்பதால் இக்பாலின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது
இரவும் பகலும் நீரிலேயே இருப்பதால் ஆறாத சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு சிறுவன் வருகிறான். மேலும், சரியான உணவு கிடைக்காததால் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்பட்டுள்ளது. இது ஒரு கடுமையான மனநலப் பாதிப்பாகவோ அல்லது அரிதான தோல் நோயாகவோ இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு உடனடியாகத் தலையிட்டு அச்சிறுவனுக்கு மருத்துவச் சிகிச்சையும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
