இமாச்சல பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்து வருவதால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட 260-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 68 பேர் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். 89 பேர் மழைக்கால சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 257 பேர் மாயமாகியுள்ளதால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
காங்ரா, மண்டி, ஹமிர்பூர், சிம்லா மற்றும் சிர்மௌர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா, குலு, சோலன் மற்றும் பிலாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
