இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனை உயர் இரத்த அழுத்தம். ஆரம்பத்திலேயே இதைக் கவனிக்காவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடும்.
இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், மாத்திரைகள் இல்லாமல் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உடல் எடையை கவனியுங்கள்
உடல் எடை அதிகரிக்கும் போது இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். உடல் எடையைக் குறைப்பது பிபி-யைக் குறைக்க மிகச்சிறந்த வழியாகும். பொதுவாக ஒரு கிலோ எடையைக் குறைத்தால், 1 mm Hg அளவு இரத்த அழுத்தம் குறையும்.
தினமும் உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மற்றும் உடல் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை 5 முதல் 8 mm Hg வரை குறைக்கலாம்.
இதையும் படிங்க : வெந்நீர் குடித்த பிறகு நடைபயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன?
ஆரோக்கியமான உணவு
முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் சோடியம் அளவை குறைப்பது இரத்த அழுத்தத்தை குறைக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது, சமையலில் உப்பைக் குறைத்து மூலிகைகள், மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது.
மது அருந்துவதைத் தவிருங்கள்
அதிகமாக மது அருந்துவது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, பிபி மாத்திரைகளின் வீரியத்தையும் குறைத்துவிடும். எனவே மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது.
புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்
புகையிலையில் உள்ள நிகோடின் இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்து, இதயத்தை வேகமாகச் செயல்பட வைக்கிறது. புகைப்பிடிப்பதை நிறுத்திய 20 நிமிடங்களிலேயே இரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் சீராகத் தொடங்கும்.
நிம்மதியான தூக்கம் அவசியம்
தினமும் இரவு 7 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். எனவே, தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் மொபைல், டிவியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க : உங்களுக்கு முட்டை சாப்பிட பிடிக்குமா? இந்த விஷயத்தில் கவனமா இருங்க!
மன அழுத்தத்தைக் குறையுங்கள்
நீண்ட கால மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். தியானம், ஆழமான மூச்சுப்பயிற்சி மற்றும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது மனதை அமைதிப்படுத்தும்.
பிபி-யைக் கண்காணியுங்கள்
வீட்டிலேயே இரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவி மூலம் உங்கள் பிபி அளவைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். மேலும், மருத்துவர்களைத் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்துங்கள்
இரத்தத்தில் அதிக சர்க்கரையும், கெட்ட கொழுப்பும் இருப்பது இதய நோய்க்கான அபாயத்தை இரட்டிப்பாக்கும். எனவே தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு முக்கியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
