உலக அளவில் அதிக மரணங்கள் நிகழக் காரணமாக இருப்பதில் முதல் இடத்தில் இருப்பது புகையிலைப் பொருட்கள்தான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் எழுபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் தங்கள் உயிரை இழக்கிறார்கள். இதில் என்னவொரு கொடுமை என்றால் புகைப்பவர்கள் மட்டுமின்றி அருகில் இருப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.
புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருந்த காரணத்திற்காக மட்டுமே, அந்த நச்சுப் புகையை சுவாசித்து 16 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக இந்த பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களில் பெரும்பாலானோர், தங்களின் தந்தையர் புகைப்பிடிப்பதை முன்மாதிரியாகக் கொண்டே இந்த தவறைத் தொடங்குகிறார்கள் என்பது கசப்பான உண்மை.
இதையும் படிங்க : இனிப்பான விஷம்., கூல்ட்ரிங்க்ஸில் மறைந்திருக்கும் ஆபத்துகள்
புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்
புகைப்பிடிப்பதால் மனித உடலின் ஒவ்வொரு பாகமும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, மாரடைப்பு, திடீர் இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம் அதீதமாக அதிகரித்தல் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகள் உருவாகின்றன.
நுரையீரல் மட்டுமன்றி வாய், தொண்டை, குரல்வளை, உணவுக் குழாய், கணையம், கல்லீரல், சிறுநீர்ப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் புற்றுநோய் பரவ வழிவகுக்கிறது.
மீண்டு வர என்ன செய்ய வேண்டும்?
இப்பகழக்கத்தில் இருந்து விடுபட முதலில் மனதளவில் தீர்க்கமான, உறுதியான முடிவை எடுக்க வேண்டும். புகைப்பிடிக்கத் தோன்றும் நேரங்களில், கவனத்தை திசைதிருப்ப உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்ற ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளில் ஈடுபடுவது மனதிற்கும் உடலிற்கும் நலம் சேர்க்கும்.
