தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகை (பயோமெட்ரிக்) பதிவை ஜூலை 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலை, கல்வி அல்லது பிற காரணங்களால் தங்களது சொந்த ஊரை விட்டு வேறு பகுதியில் தற்காலிகமாக வசித்து வரும் குடும்ப உறுப்பினர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.
வயது முதிர்வு, உடல்நலக் குறைவு அல்லது பிற காரணங்களால் நேரில் ரேஷன் கடைக்குச் செல்ல முடியாதவர்களுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பகுதிக்கான ரேஷன் கடை விற்பனையாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டால், விற்பனையாளர் நேரடியாக வீட்டிற்கு வந்து கைரேகை பதிவை மேற்கொள்வார்.
