நெதர்லாந்து சொகுசு கப்பலில் பயணித்த சிலருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. எலிகள் மூலம் பரவும் இந்த வைரஸ் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து புறப்பட்ட சொகுசு கப்பலில் பயணம் செய்த சிலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஹண்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் பெரும்பாலும் எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடியதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க : உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருவதை உணர்த்தும் அறிகுறிகள்!
அறிகுறிகள் என்ன?
ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட எலியின் சிறுநீர், மலம், எச்சில் இவற்றை சுவாசிப்பதன் மூலம் பரவக்கூடியதாக உள்ளதாம். குறிப்பாக அசுத்தமான இடங்களில் இந்த ஆபத்து அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு பாதிப்பு தீவிரமடைந்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நுரையீரல் பாதிப்பு வரை செல்லக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்காத்துக்கொள்வது எப்படி?
சுற்றுப்புறங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களை மூடி பாதுகாப்பாக வைப்பது அவசியம். எலிகள் அதிகம் காணப்படும் இடங்களை தவிர்ப்பது நல்லது. ஹண்டா வைரஸுக்கு தற்போது தனிப்பட்ட மருந்து எதுவும் இல்லை என்பதால், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெறுவது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
