நாம் வழக்கமாகப் பூசணிக்காயைப் சமையலுக்குப் பயன்படுத்திவிட்டு, அதன் விதைகளை வீணாகக் குப்பையில் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அளவில் மிகச் சிறியதாக இருக்கும் இந்த பூசணி விதைகளுக்குள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கிறது.
இந்த விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இத்தகைய சத்துக்கள் நிறைந்த பூசணி விதைகளை ஏன் சாப்பிட வேண்டும், அவற்றை அன்றாட உணவில் எப்படிச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதை இதில் பார்ப்போம்.
பூசணி விதைகளின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
பூசணி விதைகளைத் தொடர்ந்து நமது உணவில் சேர்த்து வரும்போது பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்த விதைகள் இரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது.
இதையும் படிங்க : முடி வளர்ச்சிக்கு உதவும் பூசணி விதை எண்ணெய் : எப்படி பயன்படுத்தனும்?
இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள அத்தியாவசியத் தாதுக்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதல் திறனை அதிகரிக்க உதவுகின்றன. உடலுக்கு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த விதைகள் துணைபுரிகின்றன.
உணவில் பூசணி விதைகளைச் சேர்க்க 5 சிறந்த வழிகள்
ஆரோக்கியம் தரும் இந்த பூசணி விதைகளை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாதவர்களுக்காக, உணவில் சேர்த்துக் கொள்ள 5 எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஊட்டச்சத்து நிறைந்த ஸ்மூத்திகள்
நீங்கள் காலையில் பருகும் பழங்கள் அல்லது காய்கறி ஸ்மூத்திகளுடன் ஒரு ஸ்பூன் பூசணி விதைகளைச் சேர்த்து நன்றாக அரைத்துக் குடிக்கலாம். இது உங்கள் ஸ்மூத்திக்கு ஒரு கிரீம் போன்ற மென்மையான தன்மையைத் தருவதுடன், அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் பல மடங்கு அதிகரிக்கும்.
யோகர்ட் மற்றும் தயிர் கலவை
காலை உணவு அல்லது மாலை நேரச் சிற்றுண்டியாக நீங்கள் தயிர், யோகர்ட் அல்லது ஓட்ஸ் சாப்பிடும் வழக்கம் உடையவர் என்றால், அதனுடன் சிறிதளவு பூசணி விதைகளைத் தூவிச் சாப்பிடலாம். இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உடலுக்குக் கூடுதல் ஆற்றலையும் தரும்.
எனர்ஜி தரும் ‘ட்ரெயில் மிக்ஸ்’
மாலை நேரத்தில் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, பூசணி விதைகளுடன் உலர்ந்த பழங்கள் மற்றும் சாக்லேட் துண்டுகளை ஒன்றாகக் கலந்து ஒரு சுவையான ‘ட்ரெயில் மிக்ஸ்’ சிற்றுண்டியை நீங்களே தயாரிக்கலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடிய ஒரு சிறந்த இடைவேளை உணவாகும்.
இதையும் படிங்க : உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? எப்படி குறைப்பது?
சுவையான சாலட்கள்
நீங்கள் காய்கறி சாலட் அல்லது பழ சாலட் என எந்த வகையான சாலட் தயாரித்தாலும், அதன் மேலே வறுத்த பூசணி விதைகளைத் தூவிப் பரிமாறலாம். இது சாலட்டிற்கு ஒரு தனித்துவமான சுவையையும், மொறுமொறுப்பான தன்மையையும் கொடுக்கும்.
தனித்துவமான பெஸ்டோ சாஸ்
பாரம்பரியமாக வீடுகளில் ‘பெஸ்டோ சாஸ்’ தயாரிக்கும் போது, அதற்குப் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த பைன் நட்ஸ்களுக்கு மாற்றாகப் பூசணி விதைகளைப் பயன்படுத்தலாம். இது சாஸுக்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருவதுடன், உணவின் சத்து மதிப்பையும் கூட்டுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்)
