ஸ்மார்ட்போன்களை EMI முறையில் வாங்குவது இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், EMI தொகையை சரியான நேரத்தில் செலுத்தாத சிலரின் மொபைல் போன்களை, கடன் வழங்கும் நிறுவனங்கள் தொலைவிலிருந்தே முடக்கும் நடைமுறையும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த நடைமுறைக்கு தெளிவான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களின் அதிகாரத்திற்கும், வாடிக்கையாளர்களின் உரிமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த RBI முயற்சி செய்துள்ளது.
எந்த போன்களை மட்டும் லாக் செய்யலாம்? என்ன ஆகும்?
RBI விதிகளின்படி, அந்த குறிப்பிட்ட ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப் வாங்குவதற்காகவே கடன் பெற்றிருந்தால் மட்டுமே அந்த சாதனத்தை ரிமோட்டில் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக, தனிநபர் கடன் அல்லது வேறு தேவைக்காக பெற்ற கடனை செலுத்தவில்லை என்பதற்காக, நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனை வங்கி அல்லது நிதி நிறுவனம் லாக் செய்ய முடியாது.
இதையும் படிங்க : ஓட்டுநர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்தும் ஊபர் நிறுவனம்
முழுமையாக லாக் செய்ய 60 நாட்கள் அவகாசம்
கடன் தொகை 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே, அந்த சாதனத்தை முழுமையாக கட்டுப்படுத்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
EMI செலுத்தியதும் எவ்வளவு நேரத்தில் போன் திறக்கப்படும்?
நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்திய பிறகு அல்லது கடன் கணக்கை ஒழுங்குபடுத்திய பிறகு, பொதுவாக ஒரு மணி நேரத்திற்குள் போனில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். போன் திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
