இரவு 11 மணி ஆகியும் தூங்காம இருக்கீங்களா? இந்த பிரச்சனைகள் வரலாம்..!

நமது உடலில் ஒரு இயற்கையான நேர அமைப்பு உள்ளது. இது இரவு நேரத்தில் உடலை ஓய்விற்கு தயார் செய்யும். குறிப்பாக இரவு 10.30 மணிக்குப் பிறகு, உடல் “ரிப்பேர் மோட்”க்கு மாறுகிறது. இந்த நேரத்தில் செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன, ஹார்மோன்கள் சமநிலைக்கு வருகின்றன, செரிமான அமைப்பு மெதுவாகிறது.

இந்த நேரத்தில் தூங்காமல் நீண்ட நேரம் விழித்திருப்பதால் மன அழுத்த ஹார்மோன் அதிகரிக்கிறது. இது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கொழுப்பு எரியும் வேகம் குறைகிறது. வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கிறது. இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி செய்தாலும், டயட் பின்பற்றினாலும் உடல் எடை குறையாது.

தூக்கம் குறையும்போது, உடல் சோர்வு, மனநிலை பாதிப்பு. கவனக் குறைவு, எரிச்சல், வேலை திறன் குறைவு போன்றவை நாளடைவில் அதிகரிக்கும். மேலும், நீண்ட காலத்தில் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள், நீரிழிவு போன்ற அபாயங்களும் அதிகரிக்கலாம்.

நல்ல தூக்கம் கிடைக்க என்ன செய்யலாம்?

தினமும் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கம் உருவாக்குங்கள்.

படுக்கும் நேரத்திற்கு முன் திரை பயன்பாட்டை குறைக்கவும்.

இரவு உணவை லேசாகவும், முன்கூட்டியே முடிக்கவும்.

படுக்கும் முன் அமைதியான சூழலை உருவாக்குங்கள் (புத்தகம் வாசிப்பு, மெதுவான இசை போன்றவை).

வார இறுதியிலும் கூட தூக்க நேரத்தை அதிகமாக மாற்ற வேண்டாம்.

உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவை அவசியம். ஆனால் அவை முழுமையாக நடக்க சரியான நேரத்தில் தூங்குவது அவசியம்.

Related Post

Latest News