மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது ஏன்? இதுதான் காரணமா?

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் டாஸ்மாக் மதுக் கடைகளில், மது பாட்டிலில் குறிப்பிட்ட விலையைவிட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளில் மதுபாட்டில்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் இந்த நடைமுறை தொடர்வதாக மதுபிரியர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், கூடுதல் தொகை வசூலித்தால் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இதற்கிடையில், “ஏன் கூடுதல் தொகை வசூலிக்க வேண்டிய நிலை வருகிறது?” என்பதை விளக்கும் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

அந்த பட்டியலில், ஒரு டாஸ்மாக் கடையில் தினசரி ஏற்படும் செலவுகள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. காலி பாட்டில் சேகரிப்பு, ஸ்டிக்கர் ஒட்டுதல், பாதுகாப்பு செலவு, மின் கட்டணம், தண்ணீர், இணைய வசதி, வங்கி மற்றும் அலுவலக பயண செலவுகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக ஆயிரக்கணக்கில் பணம் செலவாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு மாதாந்திர செலவுகளாக கட்டிட வாடகை, சரக்கு இறக்க கூலி, அலுவலக தொடர்பான செலவுகள், அரசியல் நன்கொடை, அதிகாரிகளுக்கான செலவுகள் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.3.77 லட்சம் வரை செலவாகும் என அந்த பட்டியல் தெரிவிக்கிறது.

இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் இது குறித்து கடும் விவாதம் எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் நிலவும் நடைமுறைகள் குறித்து அரசு முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Related Post

Latest News