மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் பதற்றம் காரணமாக உலக பொருளாதாரம் பாதிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்து முழுமையாக சீராகாததால், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிக்கல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் கடந்த மே 15-ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது. இந்நிலையில், இன்று மீண்டும் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 பைசா உயர்ந்து ரூ.104.49 ஆக விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து ரூ.96.11 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.4 வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
