தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து மோகன் சி. லாசரஸ் தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். மக்களின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு இரண்டு முக்கிய காரணங்களை அவர் முன்வைத்துள்ளார்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு மக்களின் கருத்துகளை அறிய குழு அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்ற அவர், பொதுமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதால் அவர்களின் உணர்வுகளை பகிர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
முதல் காரணம் : மதுபான விற்பனை
மது பழக்கத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், சாலை விபத்துகள், குற்றச் செயல்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் அதிகரிப்பதாகவும் மக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுவதாக கூறினார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். கொரோனா காலத்தில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது பலர் குடிப்பழக்கத்திலிருந்து விலகியிருந்ததாகவும், பின்னர் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டதால் அந்த நிலை மாறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க : முதல்வர் விஜய்யின் வருகையால் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் : மக்கள் அவதி
இரண்டாவது காரணம் : லஞ்சம்
பொதுமக்கள் தங்களது பணிகளை சட்டப்படி செய்ய முயன்றாலும் பல இடங்களில் கூடுதல் பணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுவதாக கூறினார். கிராமப்புற மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தினருடன் பேசியபோது, அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்திய முக்கிய காரணங்களில் லஞ்சப் பிரச்சனையும் ஒன்றாக இருப்பதை உணர முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் எந்த அரசியல் நோக்கத்துடனும் கூறப்படவில்லை என்றும், மக்களிடமிருந்து கேட்டறிந்த கருத்துகளை மட்டுமே பகிர்ந்துள்ளதாக மோகன் சி. லாசரஸ் விளக்கம் அளித்துள்ளார்.
