சென்னை மற்றும் திருச்சி நகரங்களை இணைக்கும் புதிய பசுமைவழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. சுமார் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 300 கிலோமீட்டர் நீளத்தில் அமையவுள்ள இந்த சாலை, பயன்பாட்டுக்கு வந்தால் சென்னை–திருச்சி பயண நேரம் சுமார் 3 மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் திருச்சியை வேகமாக இணைக்கும் புதிய பசுமைவழி அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த திட்டம் நிறைவேறினால், தற்போது தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரமும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட திட்டம்
இந்த புதிய எக்ஸ்பிரஸ்வே சுமார் ரூ.20,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. மொத்த நீளம் சுமார் 300 கிலோமீட்டராக இருக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் (Access-Controlled Expressway) வசதியுடன் உருவாக்கப்படவுள்ளது. அதாவது, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாகனங்கள் சாலையில் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கப்படும். இதனால் சிக்னல்கள், குறுக்குச் சாலைகள் மற்றும் தேவையற்ற போக்குவரத்து இடையூறுகள் தவிர்க்கப்படும்.
3 மணி நேரத்தில் சென்னை–திருச்சி பயணம்
தற்போது சென்னை–திருச்சி இடையே சாலை மார்க்கமாக பயணம் செய்ய பொதுவாக 6 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகிறது. புதிய அதிவேக நெடுஞ்சாலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மணிக்கு 120 கிலோமீட்டர் வரை வேகத்தில் வாகனங்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் சுமார் 3 மணி நேரமாகக் குறையும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.
