சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக, மனைவிக்கு மொட்டை அடித்து, முகத்தில் கரியைப் பூசி, சிறுநீர் குடிக்க வைத்த கணவனின் கொடூர செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், கொரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தாரா மற்றும் ஜிதேந்திர காசியா. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவனின் தொடர் குடிப்பழக்கம், வரதட்சணை கொடுமை மற்றும் சந்தேகப் புத்தியால் தாரா கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : மனைவி மீது சந்தேகம், வீட்டுக்குள் ரகசிய கேமரா வைத்த கணவன் : இறுதியில் நடந்த சோகம்
இந்நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி தாரா தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற ஜிதேந்திர காசியா, அவரிடம் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில், அவரது கை, கால்களைக் கயிற்றால் கட்டியுள்ளார். பின்னர், தாராவுக்கு மொட்டை அடித்து, முகத்தில் கரி மற்றும் இன்ஜின் ஆயிலை பூசி கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதில் கொடுமை என்னவென்றால், அங்கிருந்த தங்களது குழந்தைகளையும் மிரட்டி, குழந்தையை வைத்தே தாராவிற்கு சிறுநீர் குடிக்க வைத்துள்ளார். இந்த கொடூரக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் தாரா போலீசில் புகார் அளித்துள்ளார். முதலில் இந்த சம்பவத்தை சாதாரண குடும்பச் சண்டை என்று வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்போது இந்த கொடூர வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, கணவன் ஜிதேந்திர காசியா மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
