2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் விஜய் வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் நேரடியாக பங்கேற்று அறிக்கையை வெளியிட்டார்.
தவெக கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை
நெசவாளர்களுக்காக, அவர்களின் தயாரிப்புகளை உலகளவில் விற்பனை செய்ய அரசு சார்பில் ஒரு இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய நகரங்களில் தறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும்.
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 நிதி உதவி வழங்கப்படும். மின்சார சலுகைகள் அதிகரிக்கப்படுவதுடன், நூல் மற்றும் சாயம் போன்ற மூலப்பொருட்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என்றும், ஓய்வூதியம் மாதம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, ரூ.15,000 கோடி நிதி உருவாக்கப்படும். மின்சார கட்டண உயர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகள் மின்சார வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.
விவசாயிகளுக்காக, 5 ஏக்கருக்கு குறைவான நிலம் கொண்டவர்களின் பயிர் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும்.
5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும். நெல் மற்றும் கரும்புக்கு உயர்ந்த விலை நிர்ணயம் செய்யப்படும்.
குத்தகை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 உதவி வழங்கப்படும். பயிர் காப்பீட்டில் 100 சதவீத பாதுகாப்பு வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர பரிசீலிக்கப்படும். தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
காவல்துறையினரின் ஊதியம் உயர்த்தப்பட்டு, பணிநேரம் ஒழுங்குபடுத்தப்படும். அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும். பெண் காவலர்களுக்கான வசதிகளும் மேம்படுத்தப்படும்.
மீனவர்களுக்காக, மீன்பிடி தடை கால உதவி தொகை ரூ.8,000 இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும். படகு உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
கடலோர வீடுகளை பாதுகாப்பான முறையில் மாற்றும் திட்டம் கொண்டு வரப்படும். மேலும், மானிய டீசல் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, லிட்டருக்கு ரூ.15 மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
