கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு 835 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மேலாண் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்ட தகவலின்படி, சென்னை கிளாம்பாக்கம் நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி 295 பேருந்துகளும், ஏப்ரல் 18ஆம் தேதி 310 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
அதேபோல், சென்னை கோயம்பேடு நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கு இரண்டு நாட்களில் தினமும் 55 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையைத் தவிர்த்து, பெங்களூரு, கோவை, ஈரோடு போன்ற நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
