நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தொடர் போராட்டங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் முற்றியதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
கடந்த மாதம் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியது. நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியின் போது ஏற்பட்ட தடியடி மற்றும் வன்முறையில் மாணவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மிகவும் கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் சூழல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. மாணவர்களின் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.
