மகாராஷ்டிராவில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் அதிகாரி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் நடிகை அந்தாரா பானர்ஜி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கைது செய்யப்பட்டவர் நான் இல்லை என்றும், ஒரே மாதிரியான பெயரால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் நடிகை தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை அந்தாரா பானர்ஜி, கடந்த 12-ந்தேதி குஜராத்தின் சூரத் நகருக்கு ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ததாக முதலில் தகவல் வெளியானது.
அவர் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த நிலையில், ஏ.சி. பெட்டியில் பயணம் செய்ததாகவும், இதுதொடர்பாக பயணி ஒருவருடன் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வந்த ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. அந்த நேரத்தில் போலீஸ் அதிகாரி கத்தியால் குத்தப்பட்டதாகவும் இதனால் அந்த நடிகை அந்தாரா கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
‘அது நான் இல்லை’ – நடிகை விளக்கம்
இந்த நிலையில், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தொலைக்காட்சி நடிகை அந்தாரா பானர்ஜி அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அந்தாரா சோஹம் பானர்ஜி என குறிப்பிடப்பட்டுள்ளதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான பெயர் காரணமாக, கைது செய்யப்பட்டவர் நடிகை அந்தாரா பானர்ஜி என தவறாக தகவல் பரவியதாகவும் கூறப்பட்டுள்ளது.
“சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை”
முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிடப்பட்டபோது, தனது புகைப்படம் தவறுதலாக பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ரெயில்வே போலீஸ் அதிகாரி மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நடிகை அந்தாரா பானர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.
