மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த 30 வயது செவிலியர் கழிவறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசாரும், சுகாதாரத்துறையும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உயர் கண்காணிப்பு பிரிவில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் கழிவறைக்கு அவர் சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், உடன் பணியாற்றியவர்கள் அவரைத் தேடிச் சென்றனர்.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, செவிலியர் தரையில் சுயநினைவின்றி கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இந்த மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. செவிலியர் இருந்த இடத்திற்கு அருகே சில மருந்து குப்பிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அவரது பணியிடத்தில் இருந்த சக ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
