பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாமிர்தம் விலை மற்றும் தங்கரத புறப்பாடு கட்டணத்தை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலும் பிரசாதமாக பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்வது வழக்கம்.
தற்போது கோவில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படும் அரை கிலோ டின் பஞ்சாமிர்தம் ரூ.45-க்கும், 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணமாகக் காட்டி இந்த விலைகளை அதிகரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ரூ.45-க்கு விற்கப்பட்டு வந்த அரை கிலோ பஞ்சாமிர்தம் ரூ.60 ஆகவும், ரூ.20-க்கு விற்கப்பட்ட 200 கிராம் பஞ்சாமிர்தம் ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை ஜூலை 11-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பழனி மலைக்கோவிலில் தினமும் இரவு நடைபெறும் தங்கரத புறப்பாடு சேவைக்கான கட்டணத்தையும் ரூ.2,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ.2,500 ஆக உயர்த்த கோவில் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
