இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அவரது இயற்பெயர் சின்னசாமி. 1941 ஜூலை 17-ஆம் தேதி தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்த பாரதிராஜா, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். ஆரம்ப காலத்தில் திரைப்பட வாய்ப்புகளுக்காக பல்வேறு சிரமங்களை சந்தித்தார்.
இயக்குநர் புட்டண்ணா கனகல், ஆர். சங்கரன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், 1977-ஆம் ஆண்டு ‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘என்னுயிர் தோழன்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘பசும்பொன்’, ‘அந்திமந்தாரை’, ‘கடல் பூக்கள்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
குறிப்பாக ‘16 வயதினிலே’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘வேதம் புதிது’, ‘கிழக்கு சீமையிலே’ மற்றும் ‘கருத்தம்மா’ போன்ற திரைப்படங்கள் அவரது திரைப்பயணத்தில் மைல்கற்களாகக் கருதப்படுகின்றன. கிராமத்து வாழ்க்கை, மனித உறவுகள், காதல், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை இயல்பாக திரையில் பதிவு செய்ததன் மூலம் பாரதிராஜா தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.
திரையுலகிற்கான அவரது பங்களிப்பை பாராட்டி பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ‘முதல் மரியாதை’, ‘வேதம் புதிது’, ‘கருத்தம்மா’, ‘அந்திமந்தாரை’, ‘கடல் பூக்கள்’ உள்ளிட்ட படைப்புகளுக்காக தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். மேலும், இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, பிலிம்பேர் விருதுகள், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், நந்தி விருது, விஜய் விருதுகள் மற்றும் பல்வேறு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பல அமைப்புகள் சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளார்.
