‘தமிழகம் முழுவதும் போதைக் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது’ – முதல்வர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) மாலை 2.30 மணி அளவில் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.

அவருக்கு வழிநெடுக த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மாலையில் திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். எனது நன்றி. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு சிறப்பு வணக்கம், நன்றி. என்னை இப்போது பெரம்பூர் தொகுதி மக்கள் என்றுதான் சொல்வார்கள்.

தமிழகத்திற்கு எப்படி திருச்சி இதயம் மாறியோ, அதுபோல் திருச்சி கிழக்கு தொகுதி எனது கண் இமை மாதிரி. ஆட்சிக்கு வந்து 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள், 6 நாள் கூட அமைதியாக இல்லை. இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை மாற்றி, இந்த விஜயை முதல்-அமைச்சராக, முதல் சேவகராக மாற்றி இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.

எம்.ஜி.ஆர். கூட முதல் தேர்தலில் இவ்வளவு ஓட்டு வாங்கவில்லை என்றார்கள். எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். தான். 1977-ல் போடாத ஓட்டை 2026-ல் போட்டிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுத்திருக்கலாம். எதிர்காலத்தில் தருவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது.

நம்மை பேசுபவர்களுக்கு ஒரே வேண்டுகோள். நிறுத்தாதீர்கள். நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். நான் செய்து கொண்டே இருப்பேன். நான் கோட்-சூட் போடுவதையும் சொல்கிறார்கள். மற்றவர்களை மாதிரி கலர் கலாராக இல்லை. இரண்டே கலர் கருப்பு, வெள்ளை.

அதிகபட்சமாக எல்லா கூட்டங்களிலும் 20 நிமிடம்தான் பேசுவேன். மக்கள் என்னை பார்த்து மக்களுக்கு உழைப்பதை நீங்கள் பாருங்கள். எனக்கு எதிரிகள் இல்லையா. இரண்டு பேர் இடையே தான் போட்டி. த.வெ.க. – தி.மு.க. இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் இடையில் வேலையே இல்லை.

தி.மு.க.வும், மற்றும் பலரும் சேர்ந்து கடைசி 5 நாட்களில் ஆட்சியமைக்க ஒரு கூத்து நடத்தினார்கள். எதிர்காலம் எப்படி இருக்கும், தி.மு.க. நம்மை எதிர்க்க எதிர்க்க அத்தனையும் நமக்கு நன்மையே.

இந்த ஆட்சி அமைந்த பிறகு, சட்டசபையில் நடப்பதை உன்னிப்பாக சிலர் கவனிக்கிறார்கள். அது நமக்கு சந்தோஷம்தான். இது யாரால் நடந்தது. இப்படிபட்ட நம் மக்களை தற்குறி என்று இன்னமும் சொல்கிறார்கள். தற்குறிகள் என்று சொன்னவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கினார்கள்.

மக்களை தவறாக புரிந்ததால்தான் இந்த நிலைமை. கவர்ச்சியை நம்பி ஓட்டுபோட்டார்களாம். தற்குறி என்று சொல்கிறார்கள். அண்ணா ஆக்கிய கட்சியை அடிமையாக மாற்றியது யார். அதற்கு காரணம் உங்கள் குடும்பத்திற்குள்ளேயே போய் தேடுங்கள். நீங்கள் மக்களை தப்பாக பேசினால், நான் கேட்பேன். இந்த விஜய் தான் தமிழக மக்களின் உண்மையான பிரதிநிதி.

இந்த பூர்வ ஜென்ம பந்தத்தை யாராலும் கெடுக்க முடியாது. மக்களையும், எங்களையும் பிரிக்க நினைத்தால் ஒரு காலத்திலும் நடக்காது. ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக இருந்து பாருங்கள்.

நாங்கள் 200 யூனிட் இலவசம் என்று அறிவித்தோம். முதல் 100 யூனிட் ஜெயலலிதா கொடுத்தது. இன்றைக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு. விவசாய கடன் தள்ளுபடியை முடிந்த அளவு செய்தேன்.

பொய் சொல்ல அரசியலுக்கு வரவில்லை. உங்களுடன் இருக்க அரசியலுக்கு வந்தேன். விவசாய பெருமக்களே கவலைப்படாதீர்கள். தமிழகம் முழுவதும் போதைக் கலாசாரம் கொட்டிக்கிடக்கிறது. முன்கூட்டியே தடுத்திருந்தால், பெண்களுக்கு எதிரான கொடுமை நடக்கிறது. அதை தடுக்க, சிங்கப்பெண் திட்டம் அடுத்த வாரம் தொடக்கம். குதிரை பேரம் செய்வதாக சொல்கிறார்கள். தீய சக்தியும், தீந்துபோன சக்தியும் ஒன்று சேர்ந்து திருட்டு தனமாக கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.

234 தொகுதிகளும் நம்ம தொகுதிதான். திருச்சி கிழக்கு எனக்கு செல்லப்பிள்ளை. இடைத்தேர்தலில் உங்கள் வீட்டு பிள்ளை வேட்பாளராக நிறுத்த உள்ளோம். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை கொடுப்பேன். ஒரு நாள் அதை நடத்தி காண்பிப்பேன். எனக்கு வேறு வேலை இல்லை. என் பணி, பணி செய்து கிடைப்பதே.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Post

Latest News