பயணிகள் கவனத்திற்கு., எழும்பூர் ரெயில் நிலையத்தில் முக்கிய மாற்றம்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டுள்ளன. இதனால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் ரூ.842 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளின் வசதிக்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்

முதல் கட்ட பணியாக நடைமேடை 1 முதல் 5 வரையிலான பகுதியில் புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த நடைமேம்பாலம் சுமார் 18 மீட்டர் அகலமும், 120 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

இதன் காரணமாக எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எந்த நடைமேடையில் இயக்கப்படும்?

நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டுள்ளதால், தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடைமேடை 6 முதல் 9 வரையிலான பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன.

மின்சார ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் இல்லை. சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10 மற்றும் 11-ல் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே மின்சார ரெயில் பயணிகள் வழக்கமான நடைமேடைகளையே பயன்படுத்தலாம்.

Related Post

Latest News