பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பல பகுதிகளில் தொடர் அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் நேரப்படி காலை 7.37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாகவும், பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்டிடங்கள் இடிந்து விழுந்த சம்பவங்களும் பதிவாகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் சில கடலோரப் பகுதிகளிலும் சுமார் 1 மீட்டர் உயரம் வரை அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
