அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
25 வயதான டேவ் பிஜி, அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் வசித்து வந்தார். விமான ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர், தனது திருமண நிகழ்வை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடியிருந்தார். திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருமண விழா முடிந்த பின்னர், புதுமண தம்பதியினர் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நேரங்களிலேயே காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேவ் பிஜியும் ஹெலிகாப்டரை இயக்கிய விமானியும் உயிரிழந்தனர். டேவின் மனைவி ஜெஸ்னி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டேவின் பெற்றோர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். மகனின் திடீர் மரணம் குடும்பத்தினரை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
