புகைபிடித்தலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், இங்கிலாந்து அரசு ஒரு முக்கியமான சட்ட மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில், 2009 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது. மேலும், தற்போது 17 வயது மற்றும் அதற்கு குறைவானவர்களுக்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இளம் வயதிலேயே புகைபிடிக்கும் பழக்கத்தைத் தொடங்குவதைத் தடுக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த சட்டம் உலகளவில் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புகையிலை பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து, எதிர்காலத்தில் புகையிலையற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
புகைபிடித்தலால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்
சிகரெட் புகையில் நிக்கோடின், தார், கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட 7,000-க்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. புகைபிடிப்பதால் நுரையீரல் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. இது காலப்போக்கில் மூச்சுவிடுவதில் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துகிறது.
புகைபிடிப்பதால், ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயகரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து புகை பிடித்தால், உதடு, நாக்கு, தொண்டை மற்றும் உணவு குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 5 மடங்கு அதிகரிக்கிறது.
எனவே புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சி செய்வது அவசியம். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் இந்த பழக்கத்தை கைவிட முடியும்.
