த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு வழங்குவது குறித்து விசிக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய நிலைக்கு விசிக வந்துள்ளது.
த.வெ.க. ஆட்சிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கோவையில் பரிதாபம்… மின்கம்பியை இழுத்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
இந்த ஆலோசனையில், த.வெ.க.க்கு நேரடி ஆதரவு வழங்குவதற்கு முன் சில அரசியல் நிபந்தனைகள் வைக்க வேண்டும் என்ற கருத்தே மேலோங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விஜய் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை காலி செய்து, அங்கு திருமாவளவன் போட்டியிட வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அதோடு, துணை முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலிலும் விசிகக்கு முக்கிய தொகுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், விசிக இன்னும் அதிகாரப்பூர்வ ஆதரவு கடிதம் வழங்காததால், த.வெ.க. ஆட்சியமைப்பில் தற்காலிக குழப்பம் நிலவுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் நிபந்தனையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று (சனிக்கிழமை) த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கலாம் என கூறப்படுகிறது.


