சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையை உயர்த்தியது மத்திய அரசு

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகள் இடையே ஏற்பட்ட மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் தொடர்ந்து உணரப்படுகிறது.

இந்த மோதலின் விளைவாக உலகளாவிய எரிபொருள் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் சுமார் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில், எண்ணெய் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளதால், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா நோக்கி செல்லும் விமானங்கள் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது எரிபொருள் செலவை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

இந்த சூழலில், சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலையை மத்திய அரசு சுமார் 5% உயர்த்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, விமான டிக்கெட் விலைகளும் உயர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் விமான நிறுவனங்களுக்கு இது மேலும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் சர்வதேச விமானங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

Latest News