தமிழகத்தில் மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது. உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் மதுபான ஆலைகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபான விலை உயர்வுக்கு காரணம் என்ன?
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கான கட்டண அமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களின் ஒவ்வொரு பெட்டிக்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு நிர்ணயித்தது.
எவ்வளவு விலை உயர வாய்ப்பு?
குவாட்டர், ஆஃப் போன்ற அளவுகளின் அடிப்படையில் ரூ. 10 முதல் ரூ. 30 வரை விலை உயரக்கூடும். பீர் வகைகளில் பிராண்டுகளைப் பொறுத்து ரூ. 10 முதல் ரூ. 20 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரீமியம் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள்: இவற்றின் விலை அதிகபட்சமாக ரூ. 50 வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
இருப்பினும், துல்லியமாக எந்தெந்த பிராண்டுகளுக்கு எவ்வளவு தொகை உயர்த்தப்படும் என்ற இறுதிப் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விலை உயர்வுக்கான சூழல் உருவாகியுள்ளது.
