ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 26 வயது பாகிஸ்தான் இளைஞரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடம் ராணுவத்தினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் எல்லைப் பகுதியில் நேற்று இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்களது வழக்கமான ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில், பாகிஸ்தான் எல்லையிலிருந்து நபர் ஒருவர் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவதை ராணுவத்தினர் கவனித்தனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய அந்த நபரை நோக்கி விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைச் சூழ்ந்து கொண்டு அதிரடியாகக் கைது செய்தனர். அவர் எவ்வித உளவு வேலைகளுக்காகவோ அல்லது திட்டமிட்டோ வரவில்லை என்றும், வழிதெரியாமல் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
