தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே இயங்கிய டாஸ்மாக் கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யும் முறைகளிலும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும், அதை மீறினால் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து கடை பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
