குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஹர்ஷத் கடியார் என்ற ஊழியர் பணியாற்றி வந்தார். அவர், ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான பணம் பாதுகாக்கப்பட்டிருந்த பெட்டகத்தில் இருந்து ரூ. 8.70 கோடியை சிறிது சிறிதாக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதத்தில், “குப்பைகளை வெளியே கொண்டு செல்கிறேன்” என்று கூறி பணக்கட்டுகளை மூட்டைகளில் மறைத்து வெளியே எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியில் தினசரி பணிகள் வழக்கம்போல் நடந்ததால், இந்த மோசடி யாருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு கைது செய்யப்பட்ட ஹர்ஷத் கடியாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
திருடப்பட்ட பணத்தில் இருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களா வாங்கியதுடன், ரூ. 1.40 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் ஆடம்பர கார்கள் வாங்கியதும் தெரியவந்தது. இதுவரை காவல்துறை ரூ. 2.20 கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது. மீதமுள்ள தொகையை கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
