மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா, சொத்து தகராறு காரணமாக கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் கூலிப்படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், 9 பேரை குற்றவாளிகள் என அறிவித்து தண்டனை வழங்கியது. பின்னர், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 9 பேரின் விடுதலையை ரத்து செய்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். குற்றவாளிகள் உடனடியாக காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
