முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், புதிய தொழில் முதலீடுகள், தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்தனர்.
பதவி பறிக்கப்படும்
ஊழல், லஞ்சம் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் மீது எந்த வேறுபாடும் பார்க்காமல் சட்டத்திற்கும் அரசின் ஒழுங்கு விதிகளுக்கும் உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
நிர்வாகத்திற்கு முன்னுரிமை
அமைச்சர்கள் தங்கள் துறைகளின் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், சமூக வலைதள விளம்பரங்களுக்காக நேரத்தை செலவிடுவதை விட மக்கள் நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஊழலற்ற செயல்பாடு ஆகியவை முக்கியக் கொள்கைகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
