தஞ்சையில் பனகல் கட்டிடம் எதிரே நேற்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய அனுமதி உள்ளது. ஆனால், இந்த கூட்டத்தில் சீமான் இரவு 9.30 மணியளவில் பேச்சை தொடங்கி, 10 மணியை கடந்தும் தொடர்ந்தார்.
அதற்கு முன்பே துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், கைக்கடிகாரத்தை காட்டி நேரம் ஆகிவிட்டது என எச்சரிக்கை விடுத்தார். 10 மணி கடந்த பின்னரும் பேச்சை நிறுத்தாததால், மீண்டும் அவரிடம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இருப்பினும் சீமான், தனது உரையை 10.10 மணி வரை தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சீமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


