அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள புரோஸ்டேட் புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாகவும் அதன் காரணமாக அவர் கடுமையான வலியை அனுபவித்து வருவதாகவும் அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு மே மாதம் அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது. அப்போது அவருக்கு தீவிரமான வகை புற்றுநோய் இருப்பதும், அது ஏற்கனவே எலும்புகளுக்கு பரவியிருந்ததும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜோ பைடனின் புற்றுநோய் தற்போது எலும்புகளில் பரவியிருப்பதுடன், அதையும் தாண்டி நோய் பரவியுள்ளதாக ஹண்டர் தெரிவித்துள்ளார். இந்த நோய் அவரது தந்தைக்கு மிகுந்த வலியையும் உடல் ரீதியான சிரமங்களையும் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
தந்தையின் உடல்நிலையை நேரில் பார்ப்பது மிகவும் வேதனையான அனுபவமாக இருப்பதாக ஹண்டர் தெரிவித்தார். இருப்பினும், நோயின் தாக்கத்துக்கு மத்தியிலும் ஜோ பைடன் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
