நெல்லையில் நீட் எதிர்ப்பு போராட்டம்: 12 மாணவர்கள் கைது.. போலீசாருடன் தள்ளுமுள்ளு

நெல்லை மாவட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இவர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின் போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரி டெல்லியில் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஷைலேஷ் அருள்ராஜ் தலைமையில் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முன்பாகவே, அதற்கு போலீசார் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர முயன்றதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசாரின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தை தொடர்ந்ததாக கூறி, 12 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த நடவடிக்கையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

Related Post

Latest News