செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி, ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கியுள்ளதாக கட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராசாமியை கைது செய்துள்ளனர். பணம் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் சம்பவம் தொடர்பான வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றச்சாட்டை மறுத்த வீராசாமி
ஒப்பந்ததாரர் வழங்கிய தொகை லஞ்சம் அல்ல, தனக்கு முன்பு வழங்கியிருந்த கடனைத் திருப்பிச் செலுத்திய பணம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தன் மீதும், தாம் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் மீதும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டரீதியாக தன்னை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
