தமிழக அரசியலில் இன்று ஏற்பட்ட அதிரடி திருப்பமாக, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. சென்னையில் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கூட்டணி குறித்துப் பேசுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொள்ள முயன்ற போது தனக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “கூட்டணி பேச்சுவார்த்தைக்காக என்னைச் சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார். அதுமட்டுமன்றி, ‘நேரம் கேட்டு என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்றும் ஸ்டாலின் கூறினார்” எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் தாங்கள் திமுகவை ஆதரித்ததாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் திமுகவோ எடப்பாடி பழனிசாமி யை முதலமைச்சராக்க முயற்சி செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஐயூஎம்எல், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்?
இரு நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தில் ஸ்டாலினைச் சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை என ஆதங்கப்பட்டார்.
