கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பள்ளி முடிந்து தனியாக வீட்டிற்கு சென்ற 8 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சிறுமிக்கு பாலியல் கொடுமை
தேன்கனிக்கோட்டை பகுதியில் 4-ம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து தனியாக வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது வழியில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை தடுத்து, அவரது வாயை மூடி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்துள்ளார்.
மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை
பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படைகள்
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்காக காவல்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
