நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக பல மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. குறிப்பாக ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக பலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, நீட் மறுதேர்வு வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மறுதேர்வை முன்னிட்டு வினாத்தாள் மீண்டும் கசியாத வகையில் மத்திய அரசு பல்வேறு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேர்வு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவுவதைத் தடுக்க, டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையை ஏற்று, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
