நாகை, செப்டம்பர் 20:
தவெக தலைவர் விஜய் இன்று நாகையில் பிரசாரத்தின் போது சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் நடத்துவதற்கான காரணத்தை விளக்கி உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, பிரசாரம் வார இறுதி நாட்களில் நடைபெறுவதற்கான திட்டம் மக்களுக்கு தொந்தரவு இல்லாம இருக்க வேண்டும் என்பதற்கானது. அதுதவிர, அரசியலில் சிலருக்கு ஓய்வு நாட்கள் தேவைப்படுவதால் அந்த நாட்களில் பிரசாரம் நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு கடல் தாய் மனதில் இருக்கும், எனது மனதுக்கு நெருக்கமான நாகையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
கடந்த வாரம் பிரசாரத்தின்போது பெரம்பலூர் செல்ல வேண்டியது. ஆனால், செல்ல முடியாமல், போனது. இந்த நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் இந்த பிரசார திட்டத்தைப் போட்ட பிறகு, அது என்னப்பா சனிக்கிழமை, சனிக்கிழமை என கேள்வி எழுந்தது.
அது ஒன்றும் இல்லை. உங்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது, உங்களது எந்த வேலைக்கும் தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் திட்டமிடப்பட்டது.
அரசியிலில் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா, அதனால்தான் ஓய்வு நாள்களாகப் பார்த்து திட்டமிடப்பட்டது.
அங்கு அனுமதியில்லை, இங்க அனுமதியில்லை என எத்தனைக் கட்டுப்பாடுகள். அத்தனையும் சொத்தையான காரணங்கள்.
5 நிமிடம்தான் பேச வேண்டும், 10 நிமிடம்தான் பேச வேண்டும் எனக் கட்டுப்பாடு, நான் பேசுவதே 3 நிமிடம்தான், அதிலும் இதைப் பேசக் கூடாது, அதைப் பேசக் கூடாது.
நான் அரியலூர் செல்லும்போது அங்கு மின் தடை. திருச்சியில் பேசத் தொடங்கியபோது மைக் ஒயர் கட். இப்படி பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என விஜய் கூறினார்.
அதற்கும் மேல், பேருந்துக்குள்ளேயே இருக்க வேண்டுமாம், கையை இப்படியே வைத்துக் கொள்ள வேண்டுமாம், கையை அசைக்கக் கூடாதாம். சிரிக்கக் கூடாதாம், மக்களைப் பார்த்து கையசைக்கக் கூடாது என கட்டுப்பாடுகள். நான் என்னவோ, ஏதோ என்று நினைத்தேன். ஆனால், நகைச்சவையாக இருக்கிறது. அதையும் நான் ரசிக்கிறேன். நேரடியாகவே கேட்கிறேன், மிரட்டிப் பார்க்கிறீர்களா? என விஜய் பேசினார்.