சேலம், அக்டோபர் 15:
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 23,648 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,584 கனஅடியாக சரிந்தது.
நீர் வரத்து சரிந்தாலும் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 117.46 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 117.73 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 89.89 டி.எம்.சியாக உள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.