எர்ணாகுளம், செப்டம்பர் 11:
கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜகவுக்கு ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் வரலாற்று மற்றும் கலாசாரத்தை அழிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளத்துக்கு வந்தபோது, கேரளத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 சதவீத வாக்குகள் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறினார்.
மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி எதிர்காலம் குறித்து நடந்த கருத்தரங்கில் பினராயி விஜயன்,”அவர்கள் ஒரு அரசியல் கட்சி. அதனால் இயல்பாகவே கண்டிப்பாக முயற்சிப்பார்கள். ஆனால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் கலாசாரத்தை அழித்து விடும். அந்த உணர்வு நம்மிடையே எப்போதும் இருக்க வேண்டும். மேலும் மாநிலம் முழுவதும், ஓணம் போன்ற முக்கிய பண்டிகையையும் அவர்கள் மாற்ற முயற்சிக்கிறார்கள்” என்றார்.
மேலும், “அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் பாஜகவினரின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை அனைவரும் தெளிவாகக் காண வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.