சென்னை, ஏப்ரல் 09:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரும், புதிருமாக மாணிக்கம்தாகூர் (காங்கிரஸ்), விஜய பிரபாகரன் (தே.மு.தி.க.) களம் இறங்கினர். இதில் மாணிக்கம்தாகூர் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் அந்த தேர்தல் முடிவு தொடர் பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ், தே.மு.தி.க. கட்சிகள் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ளன. விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயபிரபாகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர், மதுரை திருநகரில் மாணிக்கம்தாகூர் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று திருநகரில் உள்ள நமது் அலுவலகத்தில், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த இந்த மண்ணின் விருதுநகர் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் மக்களுக்காகவே வாழ்ந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சந்தித்தார்.
அவர் வெற்றி பெற,இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு செயல்பட்டு, அவரை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். நமது அன்புத் தலைவர் ராகுல் காந்தியின் ஆசியோடும், விருதுநகரில் விஜய்பிரபாகர் அவர்களின் வெற்றி உறுதி செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
