சென்னை, செப்டம்பர் 15:
முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,”மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர். இருமொழிக் கொள்கையைத் தமிழகத்திற்குத் தந்தவர். தமிழ்நாடு என்று சட்டப்படி பெயர் மாற்றியவர். சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டிருந்தவர். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியவர். குடும்ப ஆதிக்கமற்ற அற்புத அரசியல் தலைவர். கொள்கை வழி நின்றவர்.
கனிவின் திருவுருவம். இரட்டை வேடம் போட்டுத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், அவர்களுக்காக உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. தேர்தல் அரசியலில் அசாத்திய வியூகத்தை வகுத்து, மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு வழிவகுத்த பேரறிஞரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம்.
‘மக்களிடம் செல்’ என்ற அவரது அரசியல் மந்திரத்தைப் பின்பற்றி, 1967 தேர்தல் அரசியல் வெற்றி விளைவை, ஆட்சி மாற்றத்தை மக்கள் ஆதரவுடன் மீண்டும் தமிழகத்தில் நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்” என்று தெரிவித்துள்ளார்.